குலசை தசரா - வேடப்பொருள்கள் விற்பனை விறுவிறு
குலசேகரபட்டினத்தில் தசரா பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பக்தர்கள் அணிவதற்காக வேட பொருள்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
தூத்துக்குடி: நெல்லையில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அணிவதற்காக வேடப்பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம். குலசேகரபட்டினத்தில் இருக்கும் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழா பிரசித்தி பெற்றது. இந்த தசரா விழா வருகிற 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தவரும் பங்கேற்பது வழக்கம். தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பர். நேர்த்தி கடன் செலுத்த பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலிக்கும் பக்தர்கள் தசரா விழாவின் போது கோயிலுக்கு வந்து அந்த காணிக்கையை செலுத்துவர்.
புனித விரதம் கடை பிடிக்கும் பக்தர்கள் வேடம் அணிவதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடைகளில் பொருள்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் நெல்லையில் நெல்லையப்பர் கோயில் வாசலில் கடை அமைக்கப்பட்டு தசரா வேட பொருள்கள் விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
இதற்காக மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தசரா வேடப்பொருள்களான விநாயகர், முருகன், காளி, சுடலைமாடன், அம்மன், குரங்கு, ஆஞ்சநேயர், ராஜா, ராணி, குறவன், குறத்தி, போலீஸ் உள்ளிட்ட வேடப்பொருட்கள் வந்துள்ளது.
இதுகுறித்து விற்பனையாளர்கள் கூறுகையில், அம்மன் செட் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும், கரடி செட் ரூ.1800, மண்டை ஓடு செட் ரூ.500 முதல் ரூ.700, ராஜா, ராணி செட் ரூ.2500, ஆஞ்சநேயர் செட் ரூ.1900, போலீஸ் செட் ரூ.2500 என விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றை வாங்க கடந்த மாதமே பக்தர்கள் புக் செய்துள்ளனர். அப்படி முன்பதிவு செய்தவர்கள் மொத்தமாக வேனில் வந்து பொருட்களை எடுத்து செல்கின்றனர் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.