மதுரைக்காரங்க பாசக்காரப் பயலுகய்யா... நெதர்லாந்து நாட்டுக்காரரின் சந்தோஷ வியப்பு!
மானாமதுரை: இந்தியாவிலேயே தமிழகம்தான் மிகவும் பாதுகாப்பான மாநிலம், அதிலும் மதுரைக்காரரர்கள் மிகவும் பாசக்காரர்கள் என சைக்கிளிலேயே உலக சுற்றுப்பயணம் செய்யும் நெதர்லாந்து சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ராபர்ட் ஜான். 53 வயதாகும் ராபர்ட் ஜானிற்கு சைக்கிளில் உலகை வலம் வருவது மிகவும் பிடித்தமான ஒன்று. இதுதவிர நீச்சல், பனிச்சறுக்கு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் உள்ளவர். கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்துள்ளார். நாட்டின் முக்கிய இடங்களை சைக்கிளிலேயே வலம் வந்துள்ளார்.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே சைக்கிளில் சென்று வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்களின் வாழ்க்கை முறை பற்றியும் அறிந்து வருகிறார். தமிழகத்தை வலம் வருவதற்காக வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சைக்கிளில் சென்றார். செல்லும் வழியில் மானாமதுரை வந்தார். உலகை வலம் வருவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சைக்கிளில் வந்த அவரை பொதுமக்கள் வரவேற்றனர்.
இதுகுறித்து ராபர்ட் கூறுகையில் தமிழக மக்கள் அன்பானவர்கள், இதுவரை வந்த மாநிலங்களிலேயே தமிழகம்தர்ன் அமைதியாக உள்ளது. அதிலும் மதுரை மக்கள் மிகவும் பாசமானவர்கள். ராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்த பின் கடலில் நீந்த உள்ளேன் என்றார்.
சைக்கிளில் பல்வேறு வசதிகளுடன் வலம் வரும் அவர் பொதுமக்களிடம் அவர்களின் உணவு பழக்கவழக்கம் குறித்தும் கேட்டறிகிறார். இன்னும் ஒரு மாதம் இந்தியாவில் இருக்க உள்ளதாகவும் அதற்குள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.