காவிரியில் துரோகம்..சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட திராவிடர் விடுதலை கழகத்தினரால் பரபரப்பு
சென்னை: காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டதைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும் அதற்கு மறுப்பு தெரிவித்து கர்நாடகத்திற்கு சார்பாகவும் தமிழகத்திற்கு எதிராகவும் நடந்து கொண்ட பாஜக அரசிற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அந்த வகையில், மத்தியில் ஆளும் பாஜகவை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் இன்று போராட்டம் நடத்தினர். இன்று காலை 10 மணி அளவில் தேனாம்பேட்டையில் ஒன்று கூடிய திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது, அதனை தடுத்து நிறுத்தி போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது 50க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
திராவிடர் விடுதலை கழகத்தின் பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன் முன்னிலையில் நடந்த இந்த போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும், மதவாத பாஜக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்துவிட்டது என்றும், தமிழகத்திற்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதற்கு கண்டனத்தை தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.