பெரியார்- அம்பேத்கர் அமைப்புக்கு தடை: சென்னை ஐ.ஐ.டி.யை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது!!
சென்னை: அம்பேத்கார், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை ஐ.ஐ.டி. முன் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பேராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் மாட்டிறைச்சிக்கு தடை, அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது உள்ளிட்ட கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வந்த பெரியார்-அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் (Ambedkar-Periyar Study Circle (APSC) என்ற பெயரிலான இந்த மாணவர் அமைப்பு, அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளையும் பரப்பி வந்தது.
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு ஆணையத்திற்கு சிலர் புகார் அனுப்பினர். இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைத்ததன் பேரில் மேற்கூறிய மாணவர் அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஐ.ஐ.டி. வளாகத்திற்கு எதிரே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியல் செய்த அனைத்து அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். அனுமதிபெறாமல் திடீர் என செய்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அம்பேத்கார், பெரியார் மாணவர் அமைப்பினர் மீதான தடையை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உருவப்படம் எரிப்பு
இதனிடையே அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் புகைப்படத்தையும் எரித்தனர். அதனை போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.