எங்களுக்கு இரட்டை இலை கிடைக்கும்... மதுசூதனன் நாளை வேட்புமனு தாக்கல்- மாஃபா பாண்டியராஜன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மதுசூதனன் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு
உடனடியாக பிரச்சாரத்தை தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்றும் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாக பிளவு பட்டுள்ள அதிமுக சார்பில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் நாளை 23ஆம் தேதி தேதியுடன் முடிவடைகிறது. டி.டி.வி.தினகரன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மதுசூதனன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
வேட்பாளராக போட்டியிடும் மதுசூதனனுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மைதான் என்றும் அவர் கூறினார். இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்புவதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார்.
தீபா உடன் இணைந்து பணியாற்றவே கூறிய மாஃபா பாண்டியராஜன், தீபா பேரவையைச் சேர்ந்த ஆயிரகணக்கானோர் இன்று ஒபிஎஸ் தலைமையிலான அணியில் இணைந்துள்ளதாக கூறினார்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் நாளை பொறுப்பேற்றுக்கொண்டு உடனடியாக தங்களின் பணிகளை தொடங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.