ஓ.பி.எஸ், மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டும் கல்தா.. அமைச்சரவை அப்படியே தொடரும்
சென்னை: இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
ஆட்சியமைக்க தேவையான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலம் தன்னிடம் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில், கூடிய விரைவில் புதிய அமைச்சரவையை ஏற்படுத்தும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று, அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கே பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அதேநேரம் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் உள்ளது. முதலில் பதவியேற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஒரு நாளில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது. சசிகலா சிறையிலுள்ளதால் இன்றைய பதவியேற்பு விழா மிகவும் சிம்பிளாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டார். அவரது தலைமையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இணைந்தார். இதனால் இவ்விருவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்காது. மற்றபடி ஓ.பி.எஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்த அமைச்சர்களே தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை பட்டியல் இன்று மாலை வெளியாகும்.