கருணாநிதியின் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பு.. கொங்கு ஈஸ்வரன் இரங்கல்
சென்னை: முத்தமிழ் அறிஞர் கருணாநிதி இந்த மண்ணைவிட்டு மறைந்தது உலகத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பேரிழப்பு என்றும் அவருடைய மறைவை தாங்கக் கூடிய மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலக தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.அர்.ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இந்த மண்ணைவிட்டு மறைந்தது உலக தமிழர்களுக்கு பேரிழப்பு. தமிழுக்கும் இழப்புதான். எதையும் தாங்கும் வலிமை கொண்டவர் தலைவர் கலைஞர்.
அவர் பள்ளியில் படித்த அனைவருக்கும் வலி தாங்கக் கூடிய பயிற்சியை அவர் கொடுத்திருந்தாலும் அவரையே இழக்கின்ற இந்த வலியை தாங்கக் கூடிய சக்தி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் இயற்கையின் இந்த சதியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
அவருடைய வாழ்க்கை பாதை, அரசியல் பாதை பயணிக்கின்ற அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும். தலைவர் கலைஞர் அவர்களுடைய மறைவை தாங்கக் கூடிய அந்த மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலக தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.