வடமாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தவர்.. சங்கர் மறைவிற்கு கொங்குநாடு ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல்!
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி தமிழகம் முழுக்க பிரபலம்.இந்த நிலையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் சங்கரின் மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் மறைவு இந்திய தேசத்தில் ஆளுமைகளை உருவாக்குவதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர். சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூலமாக பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் மத்திய அரசின் பணிகளிலும், அனைத்து மாநில அரசின் பணிகளிலும் தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
[சுமார் 1000 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலையா? நம்ப முடியவில்லையே]
அப்படிபட்ட ஒரு திறமைமிக்க இளைஞரை நாம் இழந்து நிற்கிறோம். எதிர்நீச்சல் போட்டே வாழ்க்கையில் முன்னேறியவர். பல்லாயிரக்கணக்கான பேருக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ள பயிற்சி கொடுத்தவர். தன்னுடைய சொந்த பிரச்சினையில் தோற்றுப்போனார் என்பதை நம்பமுடியவில்லை. கடுமையான போட்டிகளுக்கு இடையே அனைவரையும் புறந்தள்ளி முன்னேறியவர் இன்று நம்மோடு இல்லையென்பது வேதனையளிக்கிறது.
கிராமப்புறங்களிலிருந்து வருகின்ற ஏழை மாணவர்களுக்கு முடிந்தவரை சலுகைகளை கொடுத்து பயிற்சிகளில் சேர்த்து கொண்டவர். டெல்லியில்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்புகளுக்கு பயிற்சியளிக்க முடியும் என்பதை உடைத்தெறிந்து சென்னையிலும் முடியும் என்பதை நிரூபித்து தென்னிந்தியாவின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் பயிற்சி வகுப்புகளை தொடங்கியவர். மொத்த இந்தியாவையும் தென்னிந்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்டு ஆள வேண்டுமென்ற இலட்சியத்தில் கொஞ்சம்கொஞ்சமாக வெற்றிநடை போட்டவர்.
நடை ஓய்ந்துவிட்டது என்று என்னும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. அவருடைய குடும்பத்திற்கும் மட்டும் இழப்பல்ல, வருங்கால இளைய சமுதாயத்திற்கே மிகப்பெரிய இழப்பு. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.