இனி பாஸ்போர்ட்டுக்கு இ-சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - இன்று முதல் அமல்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள இ- சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "தமிழகம் முழுவதும் 339 இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 54 கோட்ட அலுவலகங்களை தவிர்த்து 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 285 இடங்களில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதிதாக பாஸ்போர்ட் பெற விரும்புவோர், ஏற்கனவே வைத்துள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புவோர் மற்றும் தட்கல் முறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் இம்மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இச்சேவை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் தற்போது 8 சேவா கேந்திரா மையங்கள் செயல்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் இறுதிக்குள் 9வது மினி சேவா கேந்திரா மையம் பாண்டிச்சேரியில் ஏற்படுத்தப்படும். சென்னை மண்டல அலுவலகத்தில் மட்டும் 4 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரூபாய் 1500 பாஸ்போர்ட், சேவை கட்டணம் ரூபாய் 155 என மொத்தம் ரூபாய்1655 கட்டணமாக செலுத்தி இச்சேவையை பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் பெறுவதற்காக காவல்துறை மூலம் சோதனை செய்ய விண்ணப்பிப்பவரின் ஆவணங்கள் தற்போது பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இப்பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆன் லைனிலேயே அனைத்து ஆவணங்களையும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், விண்ணப்பிப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் துரிதமாக கிடைக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.