கடுமையான மூச்சுத்திணறல்.. காங். முன்னாள் தலைவர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
மூச்சுத்திணறல் காரணமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மூச்சுத்திணறல் காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அக்கட்சியின், முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று கோவையில் நடைபெற்ற கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இளங்கோவன் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு முன்னணி கட்சியின் முக்கிய பிரமுகரான இளங்கோவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.