பூரண மதுவிலக்கால் குடிப்பழக்கம் ஒழியாது... இளைஞர்கள் அடிமையாவது தடுக்கப்படும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு : தமிழகத்தில் பூரண மது விலக்கால், குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது என்ற போதும், இளைய சமுதாயம் திருந்துவதற்கு பூரண மதுவிலக்கு அவசியம் என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
இதன் மூலம் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது தடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
ஈரோட்டில், செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது...
காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு எதிராகவே செயல்படுகிறது. அதனால் தான், கட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம்.
ஆனால், பா.ஜ., ஊழலில் திளைத்த கட்சியாக உள்ளது. சுஷ்மா ஸ்வராஜின் கணவர், லலித்மோடிக்கு வக்கீலாக உள்ளாரா என்பது குறித்தும், போர்ச்சுக்கல்லில் லலித்மோடியின் மனைவி சிகிச்சை பெற சுஷ்மா உதவியது குறித்தும், சுஷ்மா ஆதாரத்துடன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.
பா.ஜ..,வில், எஸ்.எஸ்.எல்.ஸி., தோல்வியடைந்த ஸ்மிருதி ராணி, பட்டதாரியாக கூறி, அமைச்சராக உள்ளார். நாணயம் இல்லாத, மோசடி கல்வி சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் எல்லாம், அக்கட்சியில் அமைச்சராக உள்ளனர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலிதா சந்திப்பை, நகைச்சுவைக்காகவே, "கள்ள உறவு' என்றேன். உண்மையில் அந்த சந்திப்பு, தேர்தலில் அரசியல் கூட்டணி குறித்து பேசவே நடந்துள்ளது. பா.ஜ., 10 இடங்கள் கேட்டதற்கு, இரண்டு இடம் மட்டுமே தரப்படும், என்று கூறப்பட்டுள்ளது.
அதற்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழசை சௌந்திரராஜன், "எங்கள் சந்திப்பு குறித்து, அவரிடம் கருத்து கேட்டோமா. முதலில், தங்கள் கட்சி பிரச்னையை தீர்க்கட்டும்' என, கூறியுள்ளார். எங்கள் கட்சி பிரச்னையோடு, மற்ற பிரச்னைகளையும் பார்த்து கொள்வேன்.
சேலத்தில் நடந்த பிரச்னையை பொறுத்தவரை, கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை நீக்கினேன். இந்த பிரச்னையின் பின்னணியில் உள்ள பெரிய மனிதர் யார் என்பது தெரியும். விரைவில், அவரை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். அவர் மீது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுக்கும்.
த.மா.கா.,வை பொறுத்தவரை, அக்கட்சி தற்போது லெட்டர் பேடு கட்சியாக உள்ளது. அதை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கால் குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது என்ற போதும், தற்போது குடிக்கு அடிமையாகும் இளைய தலைமுறையின் எண்ணிக்கை குறையும்.
மதுவுக்கு அடிமையானவர்கள் மட்டுமின்றி, புதிதாக குடிப்பவர்களை தடுக்க, மதுவிலக்கு அவசியம். அரசியல் ஆதாயத்துக்காக, மற்ற கட்சிகள் மதுவிலக்கை கையில் எடுத்துள்ளதாக, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர், இதுகுறித்து கருத்து கூற எந்த தகுதியுமில்லை.
தமிழக காய்கறிக்கு, கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து, விரைவில் உம்மன்சாண்டியை சந்தித்து பேச உள்ளேன். இவ்வாறு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.