பாஜகவினருக்கு காமராஜர் பெயரை உச்சரிக்ககூட தகுதியில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்
பாஜகவினருக்கு காமராஜர் பெயரை உச்சரிக்ககூட தகுதியில்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல அவருடைய பெயரை உச்சரிப்பதற்கு கூட பாஜகவினருக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை, புழல் அருகே காமராஜர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழிசை விருதுநகருக்குச் சென்று காமராஜருக்கு புகழ் சூட்டியிருக்கிறார். அதே போல, சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நாங்களும் காமராஜருடைய புகழ் பாடுகிறோம் என்று சொல்கிறார்கள்.
பாஜகவினர் மக்கள் பழையவற்றை மறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றார்கள். இதே பாஜகவின் தாய்க்கட்சியான ஆர்.எஸ்.எஸ். காரர்கள், காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது வேல்கொண்டு, ஈட்டிகொண்டு கொலை செய்ய முயன்றார்கள் என்பதை நாடு மறக்காது. என்னதான் வேடம் போட்டாலும் பாஜக கட்சியினர் காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள்.
பாஜகவினர் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல அவரது பெயரை உச்சரிப்பதற்கு கூட அவர்களுக்கு தகுதியில்லை.
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் விரைவில் புழல் சிறையில் கம்பி எண்ணுவார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பேசத் தொடங்கியிருக்கும் இவர் கடந்த சில வாரமாக காங்கிரஸ் கட்சி பற்றி எல்லை மீறி பேசி வருகிறார் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்துகொண்டு பேசினார்.