கத்தார் பஞ்சாயத்து.. ட்விட்டரில் ஸ்டாலின் லெட்டருக்கு ரிப்ளை கொடுத்த சுஷ்மா
கத்தார் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து ஸ்டாலின் கோரிக்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
சென்னை : கத்தார் வாழ் இந்தியர்களை பாதுகாக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
அரபு நாடுகள் திடீரென கத்தார் நாட்டுடனாக உறவை துண்டிப்பதாக அறிவித்தன. இதனால் கத்தாரில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
"கத்தாரில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவு, வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் உள்விவகாரம் என தாங்கள் கருத்து தெரிவித்துள்ளீர்கள்.
இந்தச் சூழலில் கத்தாரில் உள்ள சுமார் 6.5 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானதாகும். கத்தாரில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை இந்திய வெளியுறவுத் துறை ஏற்கெனவே தொடங்கியிருக்கலாம் என கருதுகிறேன்.
இந்த சிக்கலான நேரத்தில் கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தோஹாவில் உள்ள தூதரகம் மூலம் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். மேலும், கடிதத்தை தனது ட்விட்டரில் பக்கத்தில் போட்டு சுஷ்மா ஸ்வராஜிற்கு ஸ்டாலின் பகிர்ந்திருந்தார்.
Thiru Stalin - Rest assured. We will look after each and every Indian national there. @mkstalin
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 7, 2017
இந்நிலையில், ஸ்டாலினின் கடிதத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சுஷ்மா ஸ்வராஜ், "திரு.ஸ்டாலின் அவர்களே கத்தாரில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது" என்று தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் கடிதம் எழுதி கோரிக்கைகளை வலியுறுத்தும் நிலையில் டுவிட்டரில் உடனுக்குடன் பதில் தெரிவிக்கும் இந்த முறைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் சுஷ்மா, ஸ்டாலின் ஜி என்று சொல்லாமல், திரு.ஸ்டாலின் என்று சொல்லியிருப்பதை பாராட்டி அவரது டுவிட்டர் பக்கத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.