மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசு பஸ்களில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது
மதுரை: மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகளில் வெடிச் சம்பவம் நடந்துள்ளது. வெடித்தது டைமர் பொருத்தப்பட்ட வெடிகுண்டு என்று தெரிய வந்துள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பஸ் சேலத்திற்கும், இன்னொரு பஸ் ஓசூருக்கும் செல்லக் காத்திருந்தது.
பஸ்ஸில் அப்போது பயணிகள் யாரும் இல்லை. காலியாக இருந்தன இரு பஸ்களும். இந்த சமயத்தில் நேற்று இரவு இரு பஸ்களிலும் அடுத்தடுத்து வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். பஸ்களில் ஆட்கள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ்களிலும் லேசான சேதமே ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறிய போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், வெடித்தது மிகவும் குறைந்த சக்தி கொண்ட நாட்டு வெடிகுண்டு வகையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறினார். இருப்பினும் விசாரணை முடிவில்தான் இதுகுறித்துத் தெரிய வரும் என்றார் அவர்.
மர்ம நபர்கள் வீசியதாக தகவல்
இதற்கிடையே சம்பவ இடத்தில் இருந்த சிலர் கூறுகையில், சில மர்ம நபர்கள் வந்து பஸ்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடிகள் செயலா?
மதுரையில் சமீப காலங்களில் ரவுடிக் கும்பல்களுக்கிடையே கடும் மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட வரிச்சியூர் செல்வம் கும்பல் இன்னொரு பிரபல ரவுடியைப் போட்டுத் தள்ள நாட்டு வெடிகுண்டுகளை டிபன் பாக்ஸில் போட்டு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் வெடிச்சத்தம் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.