மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்... ஈஸ்வரன் வலியுறுத்தல்!
மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு எல்லா அதிகாரம் இருந்தும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக தமிழகத்தை வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இன்றைய தினத்துடன் கெடு முடிந்த நிலையில், மத்திய அரசுக்கு எல்லா அதிகாரமிருந்தும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக தமிழகத்தை வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கும் செயல். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையை மத்திய அரசே கேள்விக்குள்ளாக்கியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்ப்பை எப்படி வேண்டுமானாலும் உதாசனப்படுத்தலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்திருக்கிறது. கடந்த 6 வாரங்களாக காவிரி விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுவதை போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்கினார்களே தவிர, மேலாண்மை வாரியம் அமைக்க தீவிர முயற்சி எதுவும் எடுக்கவில்லை. காவிரி விவகாரம் நீண்டகாலமாக தீர்க்க முடியாத காரணத்தினாலும், பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகுதான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை மத்தியில் ஆள்பவர்கள் நினைவில் கொள்ளாதது வேதனையளிக்கிறது.
தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு செயல்படுத்த தகுந்த அரசியல் அழுத்தத்தை ஆரம்பத்திலிருந்தே கொடுத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றிக்காக மத்திய அரசு அவமதித்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கிறோம் என்று மத்திய அரசு இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல.
எனவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் தமிழக அரசு மவுனம் காக்காமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு உடனடியாக தயாராக வேண்டும். தமிழக அரசு மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.