50 "பரோட்டா சூரிகள்".. ஒரு அதிரடி சாப்பாட்டுப் போட்டி.. கோவையில் கலகல!
சாப்பிடும் போட்டி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
Recommended Video
கோவை: சாப்பாட்டு ராமன் என்று இனி யாரையும் கேலியாக சொல்ல முடியாது. ஏனெனில் நன்றாக சாப்பிடுபவர்கள் யார் என போட்டியும் நடத்தப்பட்டு, அதில் யார் நிறைய சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டு வருகிறது ஒரு ஹோட்டலில்.
கோவையில்தான் இந்த சாப்பிடும் போட்டி நடைபெற்றது. தனியார் உயர்தர உணவகம் ஒன்று சைவம் மற்றும் அசைவ உணவுகளை கொண்டு சாப்பிடும் போட்டியை வருடா வருடம் நடத்தி வருகிறது.
நற்செய்தி
இது அப்பகுதியில் மிகவும் பிரபலமான போட்டி ஆகும். அதேபோல் இந்த ஆண்டுக்கான சாப்பிடும் போட்டியும் தற்போது நடத்தியது. இதற்காக பேஸ்புக் மூலம் அழைப்பும் விடுத்திருந்தது.இதனை கண்டதும் சாப்பாடு பிரியர்களுக்கு நற்செய்தி கிடைத்ததுபோல் உற்சாகமாகிவிட்டனர்.
50 பேர் தேர்வு
பலர் இந்த போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்தனர். நூறு, இருநூறு பேர் இல்லை... பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. என்னதான் உயர்தரமான ஹோட்டல் என்றாலும் இவ்வளவு பேருக்கும் போட்டி நடத்த கட்டுப்படியாகுமா என்ன? அதனால் 9 ஆயிரம் பேரிலிருந்து 50 பேரை போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்தனர். இவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள்தான்.
போட்டியின் நிபந்தனை
போட்டி துவங்கியது. அதன்படி முதலில் இவர்கள் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் அடங்கிய 800 கிராம் அளவு கொண்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது. அதாவது, சிக்கன், பன்னீர், மீன் உணவு வகைகள் என சைவம், அசைவம் கலந்தே இருந்தன. அதற்கு அடுத்ததாக, ஐந்து நிமிடத்திற்குள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதுதான் போட்டியின் நிபந்தனை.
சுவாரஸ்ய போட்டி
களமிறங்கினார்கள் நம் சாப்பாட்டு ராமன்கள். நிகழ்ச்சி தொடங்கியதுமே "சும்மா பூந்து விளையாட" ஆரம்பித்தனர். முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அனைத்து வகைகளையும் ஒரு கை பார்க்க தொடங்கினர். இறுதியாக, போத்தனூர் பகுதியை சேர்ந்த விவின் என்பவர் முதலிடத்தை தட்டி சென்றார். அதாவது 5 நிமிடத்திற்குள் அனைத்தையும் சாப்பிட்டு முடித்துவிட்டார். வெற்றிபெற்ற இவருக்கு கோப்பையும் வழங்கப்பட்டது.