காய்கறி, பழங்கள் சாப்பிடுங்க... மகிழ்ச்சியா வாழுங்க!!
சென்னை: மனிதர்களுக்கு மகிழ்ச்சி என்பதை மனதை பொறுத்த விசயம். என்னதான் காசு... பணம்... துட்டு... மணி இருந்தாலும், மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க முடியாது.
தினசரி பழங்கள், காய்கறிகள் சாப்பிடுபவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் அளவு கணிசமாக அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உணவை மருந்தாக சாப்பிட்ட காலம் போய் இன்றைக்கு பெரும்பாலான மக்கள் மருந்து, மாத்திரைகளை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
அறிவியல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் அதிக பழங்கள், காய்கறிகள் உண்ணும் மனிதர்களுக்கு புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களின் அபாயம் குறைவதாக ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நோயில்லா வாழ்க்கை
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழிக்கேற்ப நோய் இல்லாத உடலை பெற்றவர்கள் ஆரோக்கியசாலிகள்... அந்த ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அளவை அதிகரிக்கிறது. அதிகமாக மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தின் அளவும் கூடுகிறது.
ஆரோக்கிய உணவு பழக்கம்
சுமார் 12,000 பேரிடம் நடத்தப்பட்ட இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ஆரோக்கியமான உணவு பழக்கங்களை வைத்துள்ளதால் மன ரீதியான விஷயங்களில் நல்ல மாற்றம் உணரப்படுவதாகவும் கூறியுள்ளனர். லண்டன் பல்கலைக்கழகத்தில் சிலர்,'அதிகளவில் பழங்கள், காய்கறிகள் உண்பதால் தங்களது மகிழ்ச்சி அதிகரிப்பது வெளியப்படையாகவே உணர்வதாக' கூறியுள்ளனர்
நல்வாழ்வு
அன்றாடம் பழங்கள், காய்கறிகள் உண்பதால் 8 பகுதிகளில் மகிழ்ச்சிக்கான நன்மைகள் கண்டறியப்படும் என கூறப்பட்டுள்ளது. நல்வாழ்விற்கான மேம்பாடுகளை கண்டறிய 24 மாதங்கள் ஆனதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய்களில் இருந்து விடுதலை
பழங்கள், காய்கறிகள் உண்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைந்து இருப்பதாகவும், வார இறுதிகளில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்டால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களில் இருந்து விடுபடலாம் என ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியர்களின் உணவு
உலகிலேயே காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி இடத்தை வகித்து வருகிறது. இருந்த போதிலும் அவற்றை தங்களது தினசரி உணவில் எடுத்துக் கொள்வதில் இந்தியர்கள் மிகவும் பின் தங்கியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே தாவர உணவு சாப்பிடுவதில் மிகப் பெரிய நாடான இந்தியாவில் காய்கறிகள், பழங்களை தங்களது தினசரி உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் வெறும் 9 சதவீதம் பேர் மட்டுமே என்று தெரியவந்துள்ளது.
பின் தங்கிய இந்தியர்கள்
இந்தியாவை பொறுத்த அளவில் 2013-14ம் ஆண்டில் 88.98 மில்லியன் டன் பழங்கள், 162.89 டன் காய்கறிகளை உற்பத்தி செய்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் பழங்கள் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. ஆனால் அவற்றை சாப்பிடுவதில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் இந்தியர்கள் தாவர உணவு
டெல்லி, குர்கான், மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கததா ஆகிய நகரங்களில் உயர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்த சுமார் 1001 பேரிடம் இது தொடர்பாக சர்வே நடத்தப்பட்டது. வடமாநில நகரங்களுடன் ஒப்பிடுகையில் தென்மாநில நகரங்களில் வசிப்பவர்கள் அதிகம் காய்கறிகள், பழங்களை உணவுடன் எடுத்துக் கொள்கின்றனர்.
சென்னை - கொல்கத்தா
பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா கடைசி இடத்தை பிடித்துள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உயர் வருவாய் பிரிவு மக்கள்தான் அதிகம் தாவர உணவு சாப்பிடுபவர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஊட்டச்சத்தான உணவு
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி ஒரு நாளைக்கு தனிநபர் ஒருவர் உணவு தவிர சுமார் 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஊட்டச் சத்துகுறைபாடு தொடர்பான நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.