மழையில் மூழ்கிய மீட்டர்கள்... பழைய கட்டணத்தை வசூலிக்கும் மின் துறை... மக்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் வெள்ளம் காரணமாக பெரும்பாலான வீடுகளில் மின்சாரத்தை கணக்கிடும் மீட்டர்கள் நீரில் மூழ்கி பழுதாகியுள்ளன. இதனால் கடந்த முறை வசூலித்த பழைய கட்டணத்தை கட்டச் சொல்லி மின்சார வாரியம் தெரிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட மிகவும் அதிகமாக பெய்து வருகிறது. கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கனமழையால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் வெள்ளச் சேதத்தைச் சந்தித்துள்ளன.
குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மின்சார மீட்டர்கள் நீரில் மூழ்கின. இதனால் இம்மாதம் மின் அளவைக் கணக்கிட முடியாத நிலை மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டது.
பழைய கட்டணம்...
அதனைத் தொடர்ந்து கடந்த முறை குறிக்கப்பட்ட மின் அளவுக்கான கட்டணத்தையே இம்முறையும் மக்கள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குழப்பம்...
ஏற்கனவே, மழை வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வசித்து வரும் மக்கள், இந்த மின் கட்டணத்தை எப்படிக் கட்டுவது என குழம்பிப் போயுள்ளனர்.
வெள்ளம் காரணமாக...
கடந்த மாத தொடக்கத்திலேயே பல இடங்களில் வெள்ளம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். இதனால், பழைய மின்கட்டணத்தை விட இம்முறை குறைவாகவே கட்டணம் வரும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதிர்ச்சி...
ஆனால், மின்வாரியத்தின் இந்த கட்டணம் தொடர்பான அறிவிப்பு எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வந்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டால், முடிந்தால் உங்கள் வீட்டு ரீடிங் எவ்வளவு என்று கணக்கிட்டு வாருங்கள் என்றே பதில் வருகிறது.
விளக்கமில்லை...
சரி இம்முறை பழைய கட்டணத்தையே கட்டினால், அடுத்த முறை எவ்வாறு அதனைக் கணக்கிட்டு கூடுதலாக கட்டிய பணத்தைத் திரும்பத் தருவார்கள் என்பது குறித்த விளக்கத்தையும் மின்சார வாரியம் தரவில்லை.
சோதனை மேல் சோதனை...
இதனால், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேலும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மின் கட்டணத்திலும் ஏதேனும் சலுகை தர வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.