'எபோலா' வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்வது?
சென்னை: எபோலா வைரஸ் தாக்காமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கானோர் எபோலா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் எபோலா வைரஸ் தாக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளின் விவரம் வருமாறு,
ஆப்பிரிக்கா
எபோலா வைரஸ் பரவி வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும். அது என்ன தான் முக்கியமான வேலையாக இருந்தாலும் செல்ல வேண்டாம்.
வைரஸ்
ஒரு நோய் பரவினால் அது குறித்து அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. எபோலா வைரஸ் பரவுகிறதாம் என்று அஞ்சுவதை விட அதன் அறிகுறிகள், எப்படி பரவுகிறது, நோய் தாக்காமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
சுகாதாரம்
சுகாதாரமாக இருந்தால் நோய் தாக்காது. வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடும் முன்பு கைகளை கழுவுவது, கிருமி நாசினியை பயன்படுத்துவது நல்லது.
இறைச்சி
எபோலா வைரஸ் விலங்குகள் மூலமாக தான் மனிதர்களுக்கு பரவுகிறது. அதனால் அரைகுறையாக வேக வைத்த இறைச்சியை சாப்பிட வேண்டாம்.
ரத்தம், எச்சில்
எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், எச்சில், சிறுநீர் உள்ளிட்டவை மூலம் பரவுவதால் அவற்றில் இருந்து தள்ளி இருக்கவும்.
மாஸ்க்
சுகாதார துறை ஊழியர்கள் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கையில் மாஸ்குகள், கையுறைகள், கண்ணாடி அணிய வேண்டும். நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசியை பிறருக்கு பயன்படுத்தக் கூடாது.
காயம்
காயம், வெட்டு ஏற்பட்டால் அவற்றை உடனே மருத்துவரிடம் காண்பித்து கட்டு போட வேண்டும். திறந்திருக்கும் காயம், வெட்டு மூலம் வைரஸ் எளிதில் உடம்புக்குள் நுழையலாம்.