அதிமுக வேட்பாளர்கள் அங்கீகார கடிதத்தில் ஜெ. பெருவிரல் ரேகை- தேர்தல் ஆணையம் ஒப்புதல்!
சென்னை: அதிமுக வேட்பாளர்களின் அங்கீகார கடிதத்தில் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா பெருவிரல் ரேகை வைக்கலாம் என தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக செந்தில்பாலாஜி, ரெங்கசாமி, ஏகே போஸ் ஆகியோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
இவ்வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் பொதுச்செயலர் ஒப்புதல் கடிதம் இணைக்கப்பட வேண்டியது அவசியம். இந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்துக்கு பதிலாக பெருவிரல் ரேகையைப் பதிவு செய்திருந்தார் ஜெயலலிதா.
இது சர்ச்சையை கிளப்பியது. அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி எல்லாம் எழுந்தது.
ஆனால் முன்னதாகவே ஒப்புதல் கடிதத்தில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையை வைப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு அனுமதி வாங்கியிருக்கிறது அதிமுக. கையெழுத்திட இயலாத நிலையில் ஒருவர் இருப்பின் கைவிரல் ரேகை வைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.