குடிமகனே... வீட்டில் ‘4 புல்’ வாங்கி வைத்து நல்லா ‘குடி’மகனே... லக்கானி எதுவும் சொல்ல மாட்டாரு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குடிமகன்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகக் கூடும் என வீட்டிலேயே குறிப்பிட்ட அளவு மது வாங்கி வைத்துக் குடித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
அடுத்தவாரம் திங்கட்கிழமை தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது மூன்று நாட்களும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு நாளும் என நான்கு நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவால் குடிமகன்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இதனால், தற்போது வேறு விதமாக அவர்களுக்கு சலுகை காட்டியுள்ளது தேர்தல் ஆணையம்.
நான்கு புல் பாட்டில்கள்...
அதாவது, விடுமுறை நாட்களுக்கு முன்னதாகவே ஒவ்வொரு குடிமகனும் தலா நான்கு புல் பாட்டில்கள் வாங்கி வீட்டிலேயே வைத்து சமத்தாக சரக்கு அடிக்க சட்டப்படி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
சட்டப்படி...
அதாவது, ஒரு லிட்டர் ஒயின், ஒரு லிட்டர் அயல் நாட்டு மதுபானம், ஒரு லிட்டர் இந்திய தயாரிப்பு மதுபானம், 1.3 லிட்டர் பீர் வைத்துக் கொள்ளலாம் என, 1996ல் கொண்டு வரப்பட்ட, தமிழ்நாடு மதுபானம் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம்.
விதவிதமாக...
எனவே, இந்த சட்டத்தைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கையாக மது வகைகளை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு குடிமகன்கள் தங்கள் கடமையை செவ்வணே செய்ய முடியும். ஆனால், மேற்கூறியபடிதான் மதுவகைகளை வாங்க வேண்டுமே தவிர, ஒரே வகையான மதுவை வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேஷ் லக்கானி...
இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், "தமிழ்நாடு மதுபான விதிகளின்படி, ஒருவர் தன் சொந்த தேவைக்கு, நான்கு விதமான மதுபானங்களை தலா ஒரு லிட்டர் வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரே மாதிரியான மதுபானங்களை வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்.
பறிமுதல்...
சட்டம் அனுமதித்தபடி, நான்கு வகையான மதுபானங்களை மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அதுவும், விதிகளுக்கு மேல் கூடுதல் மதுபானம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.
கைது...
கட்சிகள் மதுபானங்களை வாங்கி, 'ஸ்டாக்' வைத்தாலோ, அதை வாக்காளர்களுக்கு கொடுத்தாலோ பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபரும் கைது செய்யப்படுவார். மதுக்கடைகளில், இந்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒருவருக்கு மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.