ஆர்.கே.நகரில் விரைவில் தேர்தல் நடைபெறும் - ஓபிஎஸ்
ஆர்.கே. நகரில் மிக விரைவில் தேர்தல் நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: வாக்காளருக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார். மிக விரைவில் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாளை மறுதினம் நடைபெற இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று இரவு ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ஓபிஎஸ் கருத்து
இந்த ரத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது என்று கூறிய அவர், மிக விரைவில் ஆர்.கே நகர் தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
ஆவணங்கள் கைப்பற்றல்
வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் ஆணையம் ரத்து செய்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யபட்டு உள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பணப்பட்டுவாடா
ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் கொடுத்தது தெரியவந்தது. மளிகை சாமான்கள், மட்டன், சிக்கன், செல்போன் டாப்அப் என பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
தேர்தல் அறிவிப்பு எப்போது?
ஆர்.கே. நகரில் நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணைய அதிகரிகள் திணறினர். இந்த நிலையில் தேர்தலை ரத்து செய்துள்ள அதிகாரிகள், நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்று நம்பிக்கை வந்த பின்னர் தேர்தல் பற்றி அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.