மலைவாழ் மக்களைத் தேடி வந்த அதிகாரிகள்.. வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை!
கடையநல்லூர்: நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசித்து வரும் மலை வாழ் மக்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் முகாமை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இதுவரை புகைப்பட அடையாள அட்டையோ அல்லது வாக்குரிமையோ இல்லாமல் தவித்து வந்த மலை வாழ் மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் எராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
ஒரு அட்டையும் கிடையாது
இதில் பலருக்கு ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை,ஆதார் அடையாள அட்டை என எதுவுமில்லாமல் உள்ளனர்.
வாக்குரிமைக்கு நடவடிக்கை
இதனை கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை குறித்தும்,முழுமையாக வாக்குகள் பதிவாகவும் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்துவருகிறது.
கருப்பாநதி அணை மேல் பகுதி
கடையநல்லூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட கருப்பாநதி அணைக்கு மேல்பகுதியில் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
170 வாக்காளர்கள்
இதில் வாக்களிக்கும் தகுதி 170பேருக்கு உள்ளது இவர்களுக்கு ரேசன்கார்டு,ஆதார் கார்டுகள் உள்ளன.ஆனால் இதுவரை வாக்களிக்கும் உரிமை மட்டும் கிடைத்ததில்லை.
கலெக்டர் கருணாகரன் உத்தரவு
இதனை அறிந்த மாவட்ட் ஆட்சியர் கருணாகரன் உத்திரவுப்படி தென்காசி கோட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில் கடையநல்லூர் தாசில்தார் நாகராஜன்,மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்,குழு அங்கு சென்று சிறப்பு முகாம் நடத்தினர்.
புகைப்படம்
அங்கு வசிக்கும் மக்களிடம் புகைப்படங்கள் இல்லாததைத் தொடர்ந்து உடனடியாக அங்கேயே புகைப்படங்களை எடுத்து படிவம் 60ல் அவர்களிடம் கையெழுத்து பெற்று இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்கும் வண்ணம் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இன்னும் 15 நாட்களில் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதனால் இதுவரை ஓட்டுரிமை இல்லாத மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.