கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை.. தமிழகம், புதுவையில்.. மே 16 மாலை வரை!
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நேற்று முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடை அமலுக்கு வந்துள்ளது. மே 16ம் தேதி மாலை வாக்குப் பதிவு முடியும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மே 16ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட விநாடியிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து வி்ட்டன.
இந்த நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 16ம் தேத் வரை கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்ளிட்டவற்றை அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது.
அதன்படி, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் எந்த விதமான கருத்து கணிப்புகளோ, தேர்தல் முடிவுகளோ வெளியிடக் கூடாது. இதனை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.