இரட்டை இலை யாருக்கு? தேர்தல் ஆணையம் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்: ஓபிஎஸ் நம்பிக்கை
இரட்டை இலை சின்னம் பிரச்சினைக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் நல்ல தீர்வு ஏற்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம் நல்ல தீர்வு ஏற்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. தாங்களே உண்மையான அதிமுக என்று இருவரும் மல்லுக்கட்டுகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியானது அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் தேர்தல் நடத்தி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அதிமுகவில் உள்ள விதியாகும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்ய ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழு டெல்லி சென்றது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்தனர். அப்போது உடனடியாக தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுகவின் சட்டவிதிகளை தலைமை தேர்தல் ஆணையரிடம் எடுத்துரைத்தோம். வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. பிரச்சினைக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் நல்ல தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.