தேர்தலுக்காக மத்திய பார்வையாளர்கள் நெல்லை வருகை- கண்காணிப்பு தீவிரம்
நெல்லை: தமிழகத்தில் தேர்தல் செலவுகளை பார்வையிட தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் 4 பேர் நெல்லை வந்துள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 29ம் தேதி வரை நடக்கிறது. சட்டசபை தேர்தலை ஓட்டி ஓவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்களுக்கு பண வினியோகம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். இதையும் மீறி ஆளும் கட்சியினர் பல இடங்களில் பணவினியோகம் செய்து வருவதாக எதிர்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்க செலவு கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மதுரை மண்டலத்திறக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் சுனில் சர்மா, பசாந்தியா, சுனிதா சிங், சுரேஷ் ஆகியோர் நெல்லை வந்தனர்.
இவர்களை தவிர இரண்டு தொகுதிக்கு ஒரு மத்திய பொது பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு விஜயகுமார், தென்காசி, கடையநல்லூர் தொகுதிக்கு லால் சுனாகா, ஆலங்குளம், நெல்லை தொகுதிக்கு பிரனாப் ஜோதி, அம்பாசமுத்திரம், பாளையஙகோட்டை தொகுதிக்கு ஜாதவ், நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிக்கு முகமது அப்துல் அசீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐஏஎஸ் அதிகாரிகள். இதனால் கண்காணிப்பு தீவிரமாகும் என அரசியல் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.