கட்சி விவகாரத்தில் தலையிட கோர்ட், தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை.. அதிமுக அதிரடி!
தண்டனை பெற்றவர் கட்சித்தலைவராக நீடிக்கலாம் என்றும் கட்சி உள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது நவநீதகிருஷ்ணன் எம்.பி கூறியுள்ளார்.
சென்னை: நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் கட்சித்தலைவராக நீடிக்கலாம் என்று சசிகலா ஆதரவு எம்.பி நவநீதகிருஷ்ணன் எம்.பி கூறியுள்ளார். கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவில் உறுப்பினராக உள்ள அனைவரும் வாக்களித்து தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தற்காலிக பொதுச்செயலாளராக யாரையும் நியமிக்க முடியாது என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்திற்கு மனு
குற்றவாளியாக தண்டனை பெற்றவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்படவேண்டும் என்ற விதி இருப்பதால், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிக்க முடியாது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.
நவநீதகிருஷ்ணன் எம்.பி
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஆதரவு ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன், தண்டனை பெற்றவர் கட்சித்தலைவராக நீடிக்கலாம் என்று கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் லாலு பிரசாத் கூட தலைவராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
தலையிட முடியாது
தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் ஆணைய கேள்விகளுக்குப் பதில் கொடுத்து விட்டோம் என்றும், கட்சி உள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் நீலிக்கண்ணீர்
அமைச்சர் செங்கோட்டையன் தனது கருத்தைக் கூற உரிமை உண்டு என்று கூறிய அவர், ஓ.பன்னீர் செல்வம் நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறியுள்ளார். அவரை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் நவநீதகிருஷ்ணன் எம்.பி கூறியுள்ளார்.