கணக்கு காட்டாத 5 தமிழக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு!
சென்னை: கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, பிரசாரம் தொடர்பான தேர்தல் செலவு கணக்கைக் காட்டாத ஐந்து தமிழக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது :-
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை குறிப்பிட்ட நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை.
அதன்படி, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேகராஜ் மல்லர், சரவணன், மதுரையில் போட்டியிட்ட சந்திரபோஸ், தூத்துக்குடியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சாந்தாதேவி, வின்ஸ்டன் ஆண்டோ அவர்களின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை.
எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது. அவர்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தால் அந்தப் பதவியில் இருந்தும், தேர்வு செய்யப்படுவதில் இருந்தும் 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.