845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை!
சென்னை: இந்தியாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழக வேட்பாளர்கள் 845 பேர் தாக்கல் செய்த செலவுக் கணக்குகள் இன்று ஆய்வு செய்யப்பட உள்ளன.
மத்திய தேர்தல் ஆணையத்தின் செலவீனப் பார்வையாளர்கள் இன்று தமிழகம் வர உள்ளனர்.மேலும், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகளின் உச்சபட்ச வரம்புகளை மீறியுள்ளனரா என்பதையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்ய நேற்று வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.அதன்படி, பிரதமர் உட்பட அனைவரும் தங்களது தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்து விட்டனர்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்ட 845 வேட்பாளர்களும் இரண்டு தவணைகளாக தங்களது செலவீனக் கணக்குகளை சமர்ப்பித்து விட்டனர்.இந்நிலையில், இறுதி கணக்கு தாக்கல் செய்வதற்கான, கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
இந்த கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக, தொகுதிக்கு இரண்டு பேர் என்ற கணக்கில் வெளிமாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருகின்றனர்.
அவர்கள், ஏற்கனவே வேட்பாளர்களின் செலவு குறித்த நிழல் கணக்கு ஒன்றை தயாரித்து வைத்துள்ளனர். அதன்படி, வேட்பாளர் அளித்த விவரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், விதிமுறைகளை மீறிய வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
அதன்படி, தேர்தல் கணக்கு சமர்ப்பிக்காதோர், தவறான கணக்கு சமர்ப்பித்தோருக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயரும் நீக்கப்படும்.
வரம்பு மீறி செலவு செய்திருந்தால் வெற்றி பெற்றிருந்தாலும் தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படுவார்கள். வேட்பாளர்கள் செலவு கணக்கு விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது.