ஆர்.கே.நகர் வங்கிகளில் டெபாசிட்டாகும் பணம்.. கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட வங்கிகளில் ஒரே நேரத்தில் அதிக அளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் பணப்பட்டுவாடா புகாரினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி அத்தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையை போன்று முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை வீடு வீடாக பிரசாரம் செய்யவும், கட்சிக்கான பூத்களை அமைப்பதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூரில் உள்ள வங்கிககளில் ஒரே நேரத்தில் பெரும்தொகை டெபாசிட் செய்யப்பட்டால் தகவல் கொடுக்க வேண்டும்.
செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் முகவர்களை செல்போன் நிறுவனங்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட வங்கிகளின் கணக்குகளை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.