சாத்தூர் அருகே காரில் எடுத்து சென்ற ரூ74 லட்சம் அதிரடி பறிமுதல்
தூத்துக்குடி: சாத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக ரூ.74 லட்சத்தைக் கைப்பற்றினர். இதனால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
சட்டசபை தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, பரிசு பொருட்களை விநியோகம் செய்ய அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் இதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக வாகன சோதனை நடத்தி வருகி்ன்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே சாத்தூர் செல்லும் மெயின் ரோடு இலுப்பையூரணி பஸ் ஸ்டாப் அருகே செக்போஸ்ட் அமைத்து அதிகாரிகள், போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த செக்போஸ்ட் வழியாக சென்ற காரை போலீசாரும், அதிகாரிகளும் மறித்து வாகன சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் ரூ.3 கோடியே 40 லட்சம் இருப்பது தெரிய வந்தது. காரில் இருந்த செக்யூரிட்டரிகளிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவில், மார்த்தாண்டம், நெல்லை, பாளை, கோவிலபட்டி ஆகிய இடங்களில் உள்ள யூனியன் வங்கி கிளைகளில் பெறப்பட்ட பணத்தை மதுரை கிளைக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.
இந்த தொகைக்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்த போது ரூ.74 லட்சத்து 50 ஆயிரத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை மட்டும் பறிமுதல் செய்து கோவில்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தாசில்தார் ராஜ்குமார் அதை கோவில்பட்டி கருவூல அதிகாரி சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தார். இது வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.