ஆர்கே நகர் தேர்தல் முறைகேடு.... பிரதமர் அலுவலகத்துக்கு நாள் தோறும் 6 ரிப்போர்ட்
ஆர்.கே. நகர் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு சென்னையில் இருந்து நாள்தோறும் சராசரியாக 6 அறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றனவாம்.
சென்னை: ஆர்.கே. நகர் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு சென்னையில் இருந்து நாள்தோறும் சராசரியாக 6 அறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றனவாம்.
ஆர்.கே.நகர். தொகுதியில் நடக்கும் பணப்பட்டுவாடா சம்பவங்கள், விதிமீறல் விவகாரங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர் தேர்தல் பார்வையாளர்கள். ஒரு நாளைக்கு இது போன்று 6 அறிக்கைகள் டெல்லிக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
இந்த புகார்களுடன் அதற்குரிய ஆவணம் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வைக்கின்றனர். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் இந்த புகார்களின் ஒரு நகல், பிரதமர் அலுவலகத்துக்கு தேர்தல் அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்படுகின்றனவாம்.
ஆளும் கட்சி மற்றும் தினகரன் தரப்புகள் பற்றிய புகார்கள் தான் இவற்றில் அதிகளவில் இருக்கிறதாம். அத்துடன் முதல்வர் எடப்பாடியார் தனது பிரச்சார பயணத்தில் விதி மீறல் செய்வதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் மாநில காவல் துறை ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதாகவும் தங்களது அறிக்கையில் சுட்டுக்காட்டியிருக்கிறார்களாம் தேர்தல் பார்வையாளர்கள்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை கோட்டை வட்டாரம் கொஞ்சமும் எதிர்பாக்கவில்லையாம். டெல்லி கேள்வி கேட்டால் எப்படி சமாளிப்பது என மண்டை காய்ந்து இருக்கிறதாம் கோட்டை.