தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது!
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் தினமான 25-ந் தேதி அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
2015ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 15-ந் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் 5 கோடியே 48 லட்சத்து 70 ஆயிரத்து 296 வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதில் ஆண்கள் 2 கோடியே 74 லட்சத்து 20 ஆயிரத்து 556 பேரும், பெண்கள் 2 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 615 பேரும், இதர வாக்காளர்கள் 3,125 பேர் அடங்குவர்.
இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர் 15-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன.
மேலும் அக்டோபர் 26, நவம்பர் 2ந் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,28,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆன்லைன் மூலம் 62,303 பேரும் முகாம்களுக்கு நேரில் வந்து 15,66,297 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து படிவங்களின் விவரமும் கணினியில் பதிவு செய்யப்பட்டன. பின்னர், விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து வீடு, வீடாக சென்று கள விசாரணையை தேர்தல் அதிகாரிகள் நடத்தினர். கள விசாரணையின் போது விவரங்கள் தவறானவை என சிலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளால் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதனை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25-ந் தேதி வழங்கப்படும்.