பள்ளி மைதானங்களில் தேர்தல் பிரச்சாரம் நடத்தலாமா? - விதிமுறைகளை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்காக பள்ளி மைதானத்தை பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், "சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஆணையம் எப்போதும் பெருமுயற்சி எடுத்து வருகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு மைதானங்கள் பற்றாக்குறை தொடர்பாக பல்வேறு மாநிலங்களிடமிருந்து முறையீடுகள் வந்தன. அரசியல் கட்சிகள், அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மைதானங்களை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்குமாறு ஆணையத்தை வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசித்து பள்ளி மற்றும் கல்லூரி மைதானங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த அனுமதி வழங்குவது என்று முடிவு செய்தது. ஆனால் பள்ளி மைதானத்தை பயன்படுத்த பின்வரும் நடைமுறைகளை அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டும்.
நடத்தை விதிமுறைகள்:
* எந்தவொரு சூழ்நிலையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கல்விப்பணிக்கு ஊறு ஏற்படுத்தக்கூடாது.
* பள்ளி, கல்லூரி நிர்வாகம் இதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்க கூடாது. அத்தகைய பிரசாரத்திற்கான முன் அனுமதி பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடமிருந்தும் மற்றும் கோட்ட வருவாய் அதிகாரியிடமிருந்தும் பெற வேண்டும்.
* அத்தகைய அனுமதி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வழங்கப்படுமே தவிர எந்த அரசியல் கட்சியும் அந்த மைதானத்தை பயன்படுத்த முன்னுரிமை கொண்டாட அனுமதிக்கக்கூடாது.
* அரசியல் கூட்டங்களுக்கான பள்ளி-கல்லூரி மைதானங்களின் ஒதுக்கீடுகளில் விதி மீறல் இருந்தால் அவை ஆணையத்தால் கடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு உரிய கோட்ட வருவாய் அதிகாரி பொறுப்பாவார்.
* அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பிரசாரம் செய்பவர்கள் மேற்சொன்னவற்றில் எந்தவித விதி மீறலும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
* பிரசார நோக்கத்திற்காக அத்தகைய மைதானங்கள் பயன்படுத்தப்பட்டால், அவை உரிய அதிகாரிகளிடம் எந்தவித சேதமும் இல்லாமல் திருப்பி அளிக்கப்பட வேண்டும். அல்லது சேதம் ஏதேனுமிருப்பின் அதற்கான இழப்பீட்டு தொகை அளிக்கப்பட வேண்டும் என்றும் உரிய பள்ளி-கல்லூரி அதிகாரிகளிடம் அந்த விளையாட்டு மைதானத்தை திரும்ப ஒப்படைக்கும் அரசியல் கட்சி அந்த இழப்பீட்டு தொகையினை செலுத்துவதற்கும் பொறுப்புடையவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.