”ஹலோ நீங்கள் போனமாசமே இறந்துட்டீங்க”- தஞ்சை பெண்ணுக்கு லெட்டர் அனுப்பிய தேர்தல் ஆணையம்!
தஞ்சை: தஞ்சாவூரில் உயிரோடு இருக்கும் பெண் இறந்ததாக கூறி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் உயிரோடு இருப்பவர் இறந்துவிட்டதாக கூறி, வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கி வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருந்து அப்பெண்ணுக்கு கடிதம் வந்துள்ளது.
தஞ்சாவூர் வலம்புரி தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருந்து கடந்த 28 ஆம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் சீனிவாசன் மனைவி தேவி இறந்துவிட்டதால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் வாக்காளர் பதிவு அதிகாரியின் கையொப்பம், சீல் போன்றவை இல்லை.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த மாதம் 15 ஆம் தேதி வாக்காளர் பெயர் திருத்தம், நீக்கம் ஆகியவை குறித்து விண்ணப்பித்தால் அவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்றனர். எனினும், இச்சம்பவத்தால் அப்பெண்ணின் குடும்பத்தார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.