தேர்தல் விதிகளை மிதிக்கும் அதிமுக... வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம் - ராமதாஸ் கண்டனம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான விதிகளை மீறி காலில் போட்டு மிதிக்கும் அ.தி.மு.கவின் செயல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கலாமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியின் அத்துமீறல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் இதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.
தருமபுரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. சாதாரண நிகழ்ச்சிகளுக்கே பொதுமக்களை சரக்குந்து போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என விதிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன.
பரப்புரைக்காக மக்களை வாகனங்களில் அழைத்து வருவது நடத்தை விதிகளின் படியும் குற்றமாகும். ஆனால், இந்த விதிகளை மதிக்காமல் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்திற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சரக்குந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் பொதுமக்கள் அழைத்து வரப் பட்டனர்.
ஜெயலலிதாவின் பரப்புரையை தடையின்றி முழுமையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கேபிள் தொலைக்காட்சியில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது என்று தனியார் தொலைக்காட்சி நிர்வாகங்களை ஆளுங்கட்சி மிரட்டுவதால் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் இருப்பதால் அவர்கள் வைப்பது தான் சட்டமாக உள்ளது.
அரசியல் கட்சிகள் நேரடியாக பிரச்சாரம் செய்வதை விட தொலைக்காட்சிகள் மூலம் பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ள நிலையில், அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் ஒருசார்பு செயல்பாடுகளால் எதிர்க்கட்சிகளின் பிரச்சார வாய்ப்புகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கின்றன. இதையும் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஏற்க முடியாத மிக மோசமான அணுகுமுறை ஆகும்.
ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் எனக்கு இல்லை என்று கை விரிக்கிறார். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுமா? என்ற ஐயம் எழுகிறது. இதை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும்.
ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு துணை போகும் அனைத்து அதிகாரிகளையும் உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் வரை காத்திருக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். தேர்தலை நியாயமாக நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.