ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட கூடாது- ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் அணி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிபரப்புக் கூடாது என்று ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்கே நகருக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. நேற்றுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஓய்ந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.
மக்களின் மனநிலையை பாதிக்கும் அளவுக்கான வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வீடியோ வெளியீடானது தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறானது என்பதால் அந்த வீடியோ ஒளிபரப்பை நிறுத்துங்கள் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்கே நகருக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதா வீடியோவை ஒளிபரப்புவது ஆர்கே நகர் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறானது. மக்களின் மனதை பாதிக்கும் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் வீடியோவை வெளியிட வேண்டாம் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் கேட்டுக் கொண்டுள்ளார்.