தினகரன் கட்சியிலேயே இல்லைன்னு சொல்லும் ஜெயக்குமார் செய்திருக்கும் வேலையை பாருங்க!
தினகரன் கட்சியில் இல்லை என்று சொல்லும் ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பொதுச்செயலாளர் சசிகலா துணை பொதுச்செயலாளர் தினகரன் என கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.
சென்னை : டிடிவி. தினகரன் கட்சியிலேயே இல்லை என்று சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் தினகரனுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கும் ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளன.
அதிமுகவின் இரு அணிகள் இணைவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்ததையடுத்து டிடிவி. தினகரன் நேற்று முதல் கட்சியில் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளார். கட்சியை பலப்படுத்த புதிய நிர்வாகிகளை அறிவித்ததோடு, ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் சுற்றுப்பயணமும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தினகரன் கொடுத்த கட்சிப் பதவியை சில எம்எல்ஏக்கள் வேண்டாம் என்று உதறிவிட்டனர். டிடிவி. தினகரன் சிறை சென்று ஜாமினில் விடுதலையானதில் இருந்து அவரைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர் அமைச்சர் ஜெயக்குமார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட கட்சியும் ஆட்சியும் முதல்வர் பழனிசாமி தலைமையில் தான் நடக்கிறது என்று கூறியிருந்தார். டிடிவி. தினகரன் அரசியல் பிரவேசம் அவமானம் என்றும், அவமானத்திற்கு பதில் கூற முடியாது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
கட்சியில் இல்லை
இதனிடையே தினகரன் புதிய நிர்வாகிகளை நியமித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயக்குமார், டிடிவி தினகரனின் கட்சி பதவியே கேள்விக்குறியாக இருக்கும் போது அவர் எப்படி நிர்வாகிகளை நியமிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் உதயகுமார்
இதே போன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தினகரனின் நவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தினகரன் மேற்கொண்டுள்ள நியமனம் கேலிகூத்தான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
|
அம்பலமான பனிப்போர்
அமைச்சர்களின் வெளிப்படையான விமர்சனத்தால் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் அணியினரிடையே நீடித்து வந்த பனிப்போர் தற்போது பகிரங்கமாக வெடித்துள்ளது. எனினும் தினகரன் கட்சியிலேயே இல்லை என்று சொல்லும் அமைச்சர்கள் செய்திருக்கும் வேலை தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
|
குட்டு உடைபட்டது
இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் லட்சக்கணக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக அம்மா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் என்று இடம்பெற்றுள்ளது, அதில் அனைவருமே கையெழுத்திட்டுள்ளனர்.
|
வைரலாகும் பிரமாணப் பத்திரங்கள்
அவ்வளவு ஏன் தினகரனை வசைபாடி தீர்க்கும் அமைச்சர் ஜெயக்குமாரும் ஒப்புதல் கையெழுத்து போட்டுள்ளார். அதேபோல ஆர்.பி உதயகுமாரும் கையெழுத்து போட்டிருக்கிறார். இந்த ஆவணங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.