ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் இப்போது இல்லை- தேர்தல் ஆணையம் அதிரடி விளக்கம்!
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுதந்திரமாக தேர்தல் நடத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, வருமானவரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனை, சுமார் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் 'விஜய பாஸ்கரின் வீடுகள், அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கின' என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் என்று சொல்லப்படுபவை வெளியாகின. அந்த ஆவணத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதிமுகவினர் மூலமாக ஒரு வாக்காளருக்கு 4,000 ரூபாய் வரை வழங்க திட்டமிட்டிருந்த திடுக் தகவலும் வெளியானது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. உறுப்பினர் அல்லாத ஒரு தொகுதிக்கு 6 மாத காலத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இந்நிலையில் நேற்றோடு 6 மாதம் காலம் முடிந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் எப்போது இடைத் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் ஆர்.கே.நகரில் சுதந்திரமாக தேர்தல் நடத்தும் சூழல் ஏற்படும் வரை இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்கும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே ஆர்.கே நகரில் தேர்தல் நடைபெறும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.