வங்கி மோசடி: நாதெள்ளா ஜூவல்லரி நிறுவனத்தின் ரூ.328 கோடி சொத்துக்கள் முடக்கம்
வங்கி மோசடி தொடர்பாக நாதெள்ளா குழுமத்தின் சொத்து முடக்கப்பட்டுள்ளது.
சென்னை: பாரத ஸ்டேட் வங்கி மோசடியில் ஈடுபட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது நாதெள்ள சம்பத்து செட்டி குழுமத்தின் 37 அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.380 கோடி கடன் வாங்கியதுடன் அதனை திருப்பி தராமல் மோசடி செய்ததுடன், வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
அதனால் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை கையிலெடுத்தது.
இதையடுத்து சென்னையின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.113 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 அசையா சொத்துக்களும், 215 கோடி மதிப்புள்ள 25 அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அதாவது நகைக்கடை நிறுவனங்களின் ரூ.328 கோடி மதிப்புள்ள சொத்துகள் மொத்தமாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.