கதிரவன் கொலையாளி ரவியின் ரூ. 11 கோடி சொத்துக்கள்.. முடக்கியது அமலாக்கப் பிரிவு
சென்னை: பிரபல ரவுடியும், ரவுடி கதிரவன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியுமான ரவியின் ரூ. 11 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
பண மோசடி வழக்கில் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுத்துள்ளது.
ரவியின் ரூ. 11.68 கோடி மதிப்புள்ள எட்டு அசையாச் சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது. இவை அனைத்தும் சென்னையில் உள்ள நிலங்கள் மற்றும் வீடுகள் ஆகும்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரவி வருவாய் ஈட்டியதாக கூறியுள்ளது அமலாக்கப் பிரிவு. தனது பெயரிலும் தனது மைனர் மகன்கள் பெயரிலும் இந்த சொத்துக்களை ரவி வாங்கியுள்ளார்.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
ரவி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நில அபகரிப்பு, கடத்தல், கொலை, கட்டப் பஞ்சாயத்து, குற்றச் செயல்களில் ஈடுபடுவது என பல புகார்கள் இவர் மீது உள்ளன.
கடந்த 2013ம் ஆண்டு கதிரவன் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் ஆவார். அவரைப் போட்டுத் தள்ளியது ரவிதான். சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் கதிரவன் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் பின்னர் சரணடைந்தார் ரவி என்பது நினைவிருக்கலாம்.