வருமான வரித்துறை மறக்கலாம்.. மக்களால் மறக்க முடியுமா அந்த கூவத்தூர் கூத்துக்களை!
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமா.அதை வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினர், சிபிஐ ஆகியோர் மறந்தாலும் மக்களால் மறக்கவே முடியாது.
சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கும்மாளம் போட்டதையும், கூவத்தூரில் பேரங்கள் ஈடேறாததால் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதையும் யாராலும் மறக்க முடியாது. ஆனால் வருமான வரி துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை அந்த நேரத்தில் அதை வசதியாக மறந்து போனதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் உருவானது. இதில் சசிகலாவுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். ஓபிஎஸ்ஸுக்கு 11 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்தது.
சென்னையிலோ அல்லது அவரவர் தொகுதியிலோ எம்எல்ஏ-க்களை உலவ விட்டால் அவர்களை எதிரணியோ அல்லது எதிர்க்கட்சியோ விலைக்கு வாங்கக் கூடும் என்று சசிகலா கருதினார். இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த அவர்களுக்கு ஒரு வழியாக தோன்றியதுதான் கூவத்தூரில் உள்ள தங்கும்விடுதியில் அவர்களுக்கு "சகல" வசதிகளுடன் தங்க வைக்கும் முடிவு.
56 அறைகளையும் சுற்றி வளைத்த சசி
அந்த ரிசார்ட்டில் இருந்த அனைத்து 56 அறைகளும் அதிமுக சார்பில் ஒரு டிராவல் ஏஜென்ட்டால் முன்பதிவு செய்யப்பட்டது. ஒரு அறையின் வாடகை நாளொன்றுக்கு ரூ.2,800 ஆகும். அதுமட்டுமல்லாது உணவு, மதுபானம் ஆகியவற்றுக்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் படகில் சவாரி செய்வதற்கு தனிக்கட்டணம் என எம்எல்ஏ-க்கள் அந்த ரிசார்டில் குதூகலமாக இருந்தனர். சசிகலா தரப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களும் ரிசார்டில் தங்கியிருந்தனர்.
நாறடித்த எம்எல்ஏ-க்கள்
ரிசார்டில் இதுதான் சாக்கு என்று சகட்டுமேனிக்கு குடித்துவிட்டு எம்எல்ஏ-க்கள் கும்மாளம் போட்டதும், அதை யாரோ வாட்ஸ் ஆப்பில் பரப்பியதும் கேலிக்கூத்தாக இருந்தது. மேலும் அழகாக பராமரிக்கப்பட்ட புல்வெளிகளில் உணவு பொருள்களை சிந்தி ஹோட்டலையே நாறடித்து விட்டனர். கட்டுச் சோறு கட்டாத குறையாக எம்எல்ஏ-க்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி சுற்றுலா சென்றது போல் அனுபவித்தனர்.
வாக்குறுதிகள்
கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏ-க்கள் சசிகலா தரப்பில் பரிசு மழை கொட்டியது. அதாவது சசிகலா தரப்புக்கு ஆதரவு கொடுத்து சசிகலா முதல்வராகிவிட்டால் 122 எம்எல்ஏ-க்களுக்கும் கட்டிக் கட்டியாக தங்கம், கட்டுக் கட்டாக பணம், அதுபோதாகுறைக்கு அமைச்சர் பதவி என ஆசை காட்டப்பட்டது. கரும்பு தின்ன கூலி கேட்பதா என்று அனைத்து எம்எல்ஏ-க்களும் ரிசார்டே கதி என கிடந்தனர்.
நினைத்தது ஒன்று....
ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் வரிகளுக்கேற்ப பதவி பதவி என்ற சசிகலா சிறை சென்றார். இவர்கள் ஒரு வாரம் தங்கியிருந்த கூவத்தூர் விடுதிக்கு சேவைக் கட்டணம், அறை வாடகை, உணவுக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ. 70 லட்சம் ஆனது. ஆனால் ரூ.20 லட்சம் மட்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மீதி ரூ.50 லட்சத்தை சசிகலா தரப்பு பட்டை நாமம் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து மத்திய அரசு, வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும் கூவத்தூரில் ரெய்டு நடத்தவில்லை. அதன்பிறகாவது மேற்கண்ட துறையினர் விசாரித்தனரா என்றால் இல்லை.
ஸ்டிங் ஆபரேஷன்
அதன் பின்னர் ஆங்கில் தொலைகாட்சி சேனல் ஒன்று எம்எல்ஏ சரவணன், கனகராஜ் ஆகியோரிடம் அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக தகவல்களை சேகரிக்கும் ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது. இதை வைத்தாவது வருமான வரி துறை விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. அப்போது மத்திய அரசுக்கு தேவைப்படுபவர்கள் மீது மேற்கண்ட துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அவர்களை தட்டிக் கேட்கும் கட்சியினர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.
தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கக்கூஸ் கட்டுவது, சாலையை பெருக்குவது, மரம் நடுவது, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் ரெய்டு ஆகியவற்றில் மட்டும் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் லஞ்சம், ஊழல், முறைகேடு ஆகியவற்றை ஒழிப்பதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். சாலையில் உள்ள குப்பை கூளங்களை அகற்றுவதை போல் ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகிய கரைகள் படிந்த மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூவத்தூர், ஈகிள்டன் உள்ளிட்ட கூத்துகள் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.