அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் விடுவிப்பு.. சசிகலா, தினகரனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை : அன்னிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1996-1997-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சசிகலா, அதிமுக முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரன், பாஸ்கரன், ஜெ.ஜெ. டிவி ஆகியோர் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கப் பிரிவு 6 வழக்குகளை பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கவேண்டும் என்றும் சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தட்சணாமூர்த்தி, இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த மே மாதம் 18-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு உதவி இயக்குனர் 3 தனித்தனி மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்கறிஞர் எம்.தண்டபாணி ஆஜரானார். இதையடுத்து, மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.