அன்னிய செலவாணி மோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
சென்னை: அன்னிய செலவாணி மோசடி வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாசன் ஹெல்த்கேர் நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
வாசன் ஹெல்த் கேர் நிறுவனமானது 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாக்டர் அருண், அவரது மனைவி மீரா ஆகியோர்தான் இந்த மருத்துவமனையின் முதல் பங்குதாரர்கள். இவர்கள் தங்களது 3 லட்சம் பங்குகளை துவாரகநாதனுக்கு விற்பனை செய்கின்றனர். துவாரகநாதனோ அதில் 1.5 லட்சம் பங்குகளை அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் விற்பனை செய்திருக்கிறார்.
இந்த அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்தில் 3-இல் 2 பங்கு பங்குகள் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதாக கருதப்படும் அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்குரியவை. அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் 1.5 லட்சம் பங்குகளை துவாரகநாதன் விற்பனை செய்த விவகாரம்தான் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.
அமலாக்கத்துறை தற்போது துவாரகநாதன் மற்றும் கார்த்தி சிதம்பரம் நடுவே நிதி விவகாரங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. 2004 முதல் 2011 முதல் துவாரகநாதன் செலுத்திய வருமான வரி குறித்த தகவல்களையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.