ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் தர கூடாது என்று அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இத்துடன் இந்த வழக்கை ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி பெற்றதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சம்மன் அனுப்பியும் அமலாக்கத் துறை முன்பு கார்த்தி ஆஜராகாததால் அவர் கடந்த 1-ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை 3 முறை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இதில் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என்று பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் கார்த்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
அதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு குறித்த நிலவர அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர் ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்பு உள்ளது.
மேலும் பணப்பரிவர்த்தனை குறித்தும் அவரிடம் நாங்கள் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்க கூடாது என்று அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கார்த்தியை விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக, கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனமாக கருதப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்து, பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.