சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம், ராமச்சந்திரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகததால் அவர்களுக்கு மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாளை காலை சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சேகர் ரெட்டி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த நிலையில் அவரது கூட்டாளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்ட விரோதமாக 131 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறி போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ கைது செய்தது. சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது.
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து 5 பேரும் ஜாமீன் கோரி மனு அளித்தனர். ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
நிபந்தனை ஜாமீன்
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் மார்ச் மாதம் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேரையும் அமலாக்கத்துறை திடீரென கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
சேகர் ரெட்டியின் கூட்டாளிகள்
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர்ரெட்டி உட்பட 3 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி எஸ்.பாஸ்கரன் சேகர்ரெட்டி உள்பட 3 பேருக்கு 10 லட்ச ரூபாய்க்கு சொந்த உத்தரவாதமும், 5 லட்ச ரூபாய்க்கு தலா இரு நபர் உத்தரவாதமும் கொடுத்து, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
அமலாக்கத்துறை சம்மன்
இந்நிலையில், சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே இரு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆஜராக உத்தரவு
ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் நாளை காலை சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் நாள்தோறும் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என தெரிவித்தது.