நீரவ் மோடிக்கு தொடர்புடைய சென்னை பிரபல நகைக் கடைகளில் டெல்லி அமலாக்கத் துறையினர் விசாரணை
சென்னை பிரபல நகைக் கடைகளில் டெல்லி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நீரவ் மோடிக்கு தொடர்புடைய சென்னையில் உள்ள பிரபல நகைக் கடைகளில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11400 கோடி முறைகேடு நடந்ததாக வங்கி நிர்வாகமே பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அறிக்கையில் அனுப்பியுள்ளது. இந்த மோசடி குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மீது புகார்கள் எழுந்துள்ளன. இவர் ஏற்கெனவே ஆக்ஸிஸ் வங்கி உள்பட அலகாபாத் வங்கிகளில் கடன் வாங்கி கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் நீரவ் மோடியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சுவிட்சர்லாந்துக்கு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. வைர வியாபாரியான நீரவ் மோடிக்கு சென்னையில் பிரபலமாக உள்ள 3 நகைக் கடைகளில் தொடர்பிருப்பதாக டெல்லி அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, வேளச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் டெல்லி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீரவ் மோடியின் சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ள நிலையில் சென்னையில் நடைபெற்ற சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.