நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பின் முதல்முறையாக தலைமைச் செயலகம் வந்தார் எடப்பாடி பழனிச்சாமி
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பின்னர் முதல் முறையாக இன்று தலைமைச் செயலகம் வந்தார் பழனிச்சாமி. காலை 12.30 மணி அளவில் செல்லும் அவரை, தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக செல்லும் அவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 122 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை வெற்றி பெற்றார் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதனையடுத்து பழனிச்சாமி முதல்வர் பதவி உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால் தமிழகத்தில் 10 நாட்களுக்கும் மேலாக நிலவி வந்த பரபரப்பு சூழல் முடிவிற்கு வந்தது. இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12.30 மணியளவில் தலைமைச்செயலகம் வந்தார். இதையொட்டி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்முறையாக தலைமைச் செயலகம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலக அதிகாரிகள் வரவேற்றனர். இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்த பழனிச்சாமி, தேர்தலின் போது, ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.