நீட் தேர்வு.. விலக்களிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு… மோடிக்கு முதல்வர் கடிதம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்ட மசோதா ஒன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கடும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும் என்றும் மாணவர்கள் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், மருத்துவப் படிப்பு சேர்க்கை தொடர்பான சட்டத்திற்கு அதாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.