நீக்கிய எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது- இதுவும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என உத்தரகாண்ட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது எடப்பாடி தரப்பு.
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உத்தரகாண்ட் விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு பக்கபலமாக இருக்கும் என்பது எடப்பாடி தரப்பினரின் நம்பிக்கை.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது. 70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரஸுக்கு 36 எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு 28 எம்.எல்.ஏக்களும் இருந்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் திடீரென அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பாஜகவுடன் இணைந்து செயல்பட்டனர். இதையடுத்து 9 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
தீடீர் ஜனாதிபதி ஆட்சி
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அம்மாநிலத்தில் திடீரென ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே 9 எம்.எல்.ஏக்களும் தங்களது தகுதி நீக்கத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தகுதி நீக்கம் செல்லும்
இந்த வழக்கில் மத்திய அரசை நைனிடால் உயர்நீதிமன்றம் வறுத்தெடுத்தது. அத்துடன் 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்துக்கும் போனது. உச்சநீதிமன்றமும் 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என கூறியதுடன் ஹரீஷ் ராவத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட்டது.
நீக்கிய எம்.எல்.ஏக்களுக்கு தடை
இந் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க 9 எம்.எல்.ஏக்களுக்கு தடையும் உச்சநீதிமன்றம் விதித்தது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகளில் ஹரீஷ் ராவத் அரசு வென்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனால் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு ஹரீஷ் ராவத் அரசு மீண்டும் பொறுப்பேற்றது.
நம்பிக்கை தரும் உத்தரகாண்ட் தீர்ப்பு
தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்ட எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என்பதுதான் உத்தரகாண்ட் வழக்கின் சாராம்சம். இதனடிப்படையில்தான் 18 எம்.எல்.ஏக்களை தைரியமாக சபாநாயகர் தனபால் ரத்து செய்திருக்கிறார். இந்த 18 எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில் சட்டசபையில் இருக்கும் எல்.ஏ.க்களின் அடிப்படையில் பெரும்பான்மையை எளிதாக நிரூபித்துவிட முடியும் என்பதுதான் எடப்பாடி தரப்பின் நம்பிக்கை.